மாற்றுவழி யாதொன்றும் இல்லை

பெற்றெடுத்த பெற்றோரை விடுதி விட்டுப்
—-பெருந்துயரில் அவர்களினைத் தவிக்க வைக்கும்
கற்றுபெரும் பதவிபெற்ற புதல்வர் கட்கும்
—-கணவர்தம் மனம்மாற்றும் மனைவி யர்க்கும்
உற்றதொரு மாற்றுவழி உலகி லுண்டோ
—-உளம்நொந்து அவர்பாடம் கற்ப தற்குப்
பெற்றபிள்ளை அத்தவற்றை செய்யும் போதே
—-பெற்றமனத் துயரத்தை அறிவர் நன்றாய் !

தன்மகனின் மன்றலுக்குப் பெண்ணைப் பார்க்கத்
—-தமரோடு செல்கின்ற பெற்ற வர்கள்
பொன்பொருளைக் கேட்டவரை வதைப்ப தற்கும்
—-பொருமலுக்கும் மாற்றுவழி ஏது முண்டோ
தன்மகளைப் பெண்பார்க்க வருப வர்கள்
—-தரவேண்டும் எனக்கேட்கும் பணத்தா சையின்
புன்செயலே பாடத்தைக் கற்கச் செய்யும்
—-புரையோடிப் போனயிந்தக் கொடுமை நீக்கும் !

தேன்பேச்சால் மனங்களினை மயக்கு வார்கள்
—-தெளிவாக வாக்குறுதி கொட்டு வார்கள்
ஊன்உயிரைத் தருவதாகச் சொல்லு வார்கள்
—-ஊராளும் ஆட்சிதனைப் பெற்ற பின்போ
மான்வேட்டை ஆடுகின்ற புலிக ளாகி
—-மக்கள்தம் வரிப்பணத்தைச் சுருட்டு வோரைக்
கூன்நிமிர்ந்து குற்றுயிராய் ஆக்க லொன்றே
—-கூறுகின்ற மாற்றுவழி வேறு இல்லை !

எழுதுவது : பாவலர் கருமலைத்தமிழாழன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *