பிரிட்டிஷ் மருத்துவ சேவைக்காகப் பணம் சேர்த்தவர் சிலை மீது மலம், மூத்திரம் அபிஷேகம் செய்யப்பட்டது.

கொவிட் 19 ஐக்கிய ராச்சியத்தைப் பிடித்து உலுப்பிக்கொண்டிருக்கும் சமயத்தில் நாட்டின் மருத்துவ சேவைக்கு நிதி சேர்ப்பதற்காக 100 வயதை எட்ட முன்னர் தனது வீட்டுத் தோட்டத்தைச் சுற்றிச் சுற்றி நடந்து நிதி சேர்த்தவர் சேர் டொம் மூர். அதன் மூலம் உலகெங்கும் பிரபலமான அந்த முதியவர் பிரிட்டிஷ் தேசிய மருத்துவ சேவைக்குச் சேர்த்துக் கொடுத்தது சுமார்  32.79 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகளாகும். அவருடைய ஞாபகத்துக்காக வைக்கப்பட்ட சிலையொன்றின் மீது மூத்திரத்தையும், மலத்தையும் கலந்து வீசியதன் மூலம் தனது கருத்தொன்றைச் சொல்ல முயன்றிருக்கிறார் 21 வயதான மாடி பட் [Maddie Budd,]என்ற பெண்.

சுற்றுப்புற சூழல் பேணுவதையும், காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று போராடுவதிலும் ஆர்வமுள்ளவர் மாடி பட். சேர் டொம் மூர் சிலையின் மீது தான் மலம், மூத்திரம் போன்றவற்றை வீசியதன் காரணம் தனியார் விமானங்களைப் பாவிக்கும் புள்ளிகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும் என்கிறார் அவர். 

“சேர் டொர் மூர் கௌரவத்துக்குரியவர், தேசிய மருத்துவ சேவை அத்தியாவசியமானது என்பதில் எனக்கும் சந்தேகமில்லை. ஆனால், தனியொருவர் தனது சொந்த விமானத்தில் பறக்கும் ஒவ்வொரு சமயத்திலும் அந்த நபர் சேர் டொம் மூர் போராடியவைக்கு மேல் ஒரு வாளி இரத்தத்தை ஊற்றுகிறார். எதற்காக இந்தப் பண்படுத்தப்பட்ட இந்த நாகரீக உலகை அழிக்க முயல்வதைத் தடுக்க அரசு முன்வரவில்லை?” என்ற எண்ணத்தை எல்லோருக்கும் ஏற்படுத்தவே இதைச் செய்தேன் என்கிறார் மாடி.

சாள்ஸ் ஜெ. போமன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *