உக்ரேன் தலைநகர்ப்பகுதியொன்றில் ஹெலிகொப்டர் விபத்து. உள்துறை அமைச்சர் உட்பட பலர் மரணம்.

இன்று காலை [ஜனவரி 18-2023] உக்ரேனின் தலைநகரின் புறநகரப் பகுதியொன்றில் பாலர் பாடசாலையொன்றுக்கு அருகே ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகி விழுந்து எரிந்தது. சமூகவலைத்தளங்களில் வெளியாகியிருக்கும் நெருப்புப் பற்றியெரியும் படங்கள் உலகெங்கும் பரவிவருகின்றன. விபரங்கள் முழுவதுமாகத் தெரியவராவிட்டாலும் நாட்டின் உள்துறை அமைச்சர் உட்பட அமைச்சரவையின் பல முக்கியத்தவர்களும் மரணமடைந்திருப்பதாகத் தெரியவருகிறது.

உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்திரிஸ்கி அவரது உப அமைச்சர், காரியதரிசி ஆகியோர் இறந்திருக்கிறார்கள். ஹெலிகொப்டரில் இருந்தவர்கள் 9 பேரென்றும் விழுந்து எரிந்ததால் ஏற்பட்ட தீவிபத்தில் இறந்தோர் உட்பட மொத்தமாக 16 பேர் இறந்திருக்கிறார்கள். இரண்டு குழந்தைகள் இறந்திருக்கின்றனர். மேலும் 10 பிள்ளைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

விபத்தினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஜனாதிபதியின் காரியதரிசி குறிப்பிட்டிருக்கிறார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *