பிரான்ஸ் தொழிலதிபரையும் மனைவியையும் கட்டி வைத்துவிட்டு வீட்டில் கொள்ளை!

பிரான்ஸின் தொழிலதிபரும் முன்னாள் அமைச்சருமாகிய பேர்னாட் தப்பியின் (Bernard Tapie) இல்லத்தில் நுழைந்த கொள்ளையர்கள் அவரையும் அவரது மனைவியையும் தாக்கிக் கட்டிவைத்து விட்டு பெறுமதியான பொருள்களை அபகரித்துச் சென்றுள்ளனர்.

பாரிஸ் நகருக்கு வெளியே Combs-la-Ville, (Seine-et-Marne) பகுதியில் அமைந்துள்ள இல்லத்துக்குள் சனிக்கிழமை இரவு இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பொலீஸார் தெரிவித்துள்ளனர்.

தம்பதிகள் உறக்கத்தில் இருந்த சமயம் வீட்டின் உள்ளே நுழைந்த நால்வர் அவர்களைத் தாக்கி கைகளைக் கட்டி அறை ஒன்றினுள் அடைத்து வைத்து விட்டு அங்கிருந்து பெறுமதி வாய்ந்த பொருள்களை அபகரித்துச் சென்றிருக்கின்றனர். றொலெக்ஸ் (Rolex) உட்பட பெறுமதி வாய்ந்த கைக்கடிகாரங்கள், வளையல்கள், காதணிகள், மோதிரம் உட்பட பல அணிகலன்கள் களவாடப்பட்டு ள்ளன என்று தெரியவருகிறது.

கொள்ளையர்கள் தப்பிச் சென்றதும் ஒருவாறு வெளியே வந்த பேர்னாட் தப்பி யின் மனைவி சம்பவம் குறித்து அயலவரிடம் தகவல் தெரிவித்தருக்கிறார். அயலவர்கள் அழைத்ததை அடுத் துப் பொலீஸார் அங்கு விரைந்து வந்து வயோதிபர்களான தம்பதிகள் இருவரை யும் மீட்டுள்ளனர். தாக்கப்பட்டதில் காயமடைந்த தப்பியின் மனைவி பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.கொள்ளை தொடர்பாக எவரும் உடனடியாகக் கைது செய்யப்படவில்லை

சம்பவத்தை அடுத்து அதிபர் மக்ரோன் போர்னாட் தப்பியுடன் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார் என்று எலிஸே மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரபல தொழிலதிபரும் மூத்த அரசியல் வாதியுமான 78 வயதுடைய பேர்னாட் தப்பி, சோசலிசக் கட்சியில் அரசியல் பதவிகளை வகித்தவர். பிரான்ஷூவா மித்ரோனின் ஆட்சியில் நகர அபிவிருத்தி அமைச்சராக விளங்கியவர். ஊழல் முறை கேடுகள் காரணமாகத் தனது அமைச்சுப் பதவியை இழந்தவர். பாடகர், நடிகர் என்று பல துறைகளில் பிரபலமாக அறியப்பட்ட அவர் தற்சமயம் புற்றுநோயினால் அவதிப்பட்டுவருகிறார்.


குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *