இலங்கையில் அதிக தொற்றுவரும் வாரங்களில் எதிர்பார்ப்பு.

இலங்கையில் புதிய மாறுபாடடைந்த வைரஸ் காரணமாக அடுத்த இரண்டு மூன்று வாரங்களில் நாடு முழுவதும்தொற்றுக்கள் மிகத் தீவிரமாகலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“காற்றில் வேகமாகப் பரவக்கூடிய புதிய வைரஸ் திரிபு ஒன்று தோன்றியுள்ளது. நாட்டில் இதுவரை கண்டறியப்பட்ட திரிபுகளை விட இது மிக மோசமானது. தொற்றாளர் ஒருவர் மூலம் பரப்பப்படும்
இந்த வைரஸ் காற்றில் ஒரு மணிநேரம் வரை தாக்குப்பிடித்து நிற்கக் கூடும்” -இவ்வாறு எச்சரிக்கப்படுகிறது.

கொழும்பு ஜெயவர்த்தன பல்கலைக்கழககத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக் கூற்றுத் துறையின் தலைவர் செல்வி நீலிகா மலவிகே (Neelika Malavige) இந்த விவரங்களை வெளியிட்டிருக்கிறார்.

காற்று மூலம் பரவக்கூடிய அந்த வைரஸ் அடுத்துவரும் வாரங்களில் பெரும் தொற்றுக்களுக்குக் காரணமாகலாம் என்று சுகாதார அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

வைரஸின் அடுத்த இரண்டு பெருக்க காலங்கள் நாட்டில் மூன்றாவது அலையாக முன்னேறக் கூடும். உண்மையான
நிலைவரம் இரண்டு – மூன்று வாரங்களில் தெரியவரும்-என்று பொதுச் சுகாதார பரிசோதகர்கள் துறையைச் சேர்ந்த உபுல் ரோஹன (Upul Rohana) கூறியுள்ளார். இத் தகவல்களை ஊடகங்கள்
வெளியிட்டுள்ளன.

இலங்கை மருத்துவமனைகளில் இன்னமும் போதியளவு அவசர சிகிச்சை வசதிகள் (ICU capacity) இருக்கின்றன எனத் தெரிவித்திருக்கிறார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசல குணவர்த்தனா (Dr Asela Gunawardena). ஆனால் தொற்றுத் தவிர்ப்பு அறிவிறுத்தல்கள் சரிவரப் பின்பற்றப்பட்டால் தான் பரவலைத் தடுக்க முடியும் என்பதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

“இதற்கு முன்னர் நோயின் அறிகுறிகள் அரிதாக இருந்தன. தற்போது இளவயதினரிடையே தொற்றின் அறிகுறிகள் பெரிய அளவில் வெளித்தெரிகின்றன. தொற்று உறுதி செய்யப்படுபவர்களில்
அநேகர் மூச்சுச் சிரமங்களைக் கொண்டிருப்பதுடன் ஒக்சிஜன் உதவியுடன் அவசர பிரிவுகளில் சேர்க்கப்பட வேண்டிய கட்டத்திலும் உள்ளனர் “-இவ்வாறு அவர்மேலும் கூறியிருக்கிறார்.

அண்டை நாடான இந்தியாவில் திடீரென ஏற்பட்ட பரவல்கள் நாட்டின் சுகாதாரக் கட்டமைப்புகளை உலுக்கியிருக்கின்ற
நிலையில் மாறுபாடடைந்த வைரஸ் அச்சம் இலங்கையிலும் ஏற்பட்டிருக்கிறது.

தாய்லாந்தில் தலைநகர் பாங்கொக்கில் தொற்றுகளும் உயிரிழப்பும் திடீரென அதிகரித்துள்ளதை அடுத்து தீவிர கட்டுப்பாடுகள் அங்கு அறிவிக்கப்பட்டுள்ளன. மாஸ்க் அணிவது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முதல் அலைகளின் போது நாட்டில் பெரும் தொற்றுப் பரவல் ஏற்படாமல் தடுத்து இழப்புகளைக் குறைப்பதில் வெற்றிகண்ட நாடுகளில் தாய்லாந்தும் ஒன்றாகும்.

உலக சுகாதார நிறுவனம் சமீப நாட்களாக வெளியிட்டு வருகின்ற உலகளாவிய வைரஸ் தொற்று எண்ணிக்கையின் படி ஆசியப் பிராந்தியத்திலேயே பெரும் தொற்று அலை உருவெடுத்து வருவது தெரிகிறது.
——————————————————————
குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *